Monday, 11 August 2014

ஏலகிரி சுற்றுலா


Yelagiri

                     தமிழ்நாட்டில் கோடை சுற்றுலா தளம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது ஊட்டியும், கொடைக்கானலும்தான். ஆனால் ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரியைப்பற்றி பலர் தெரிந்து வைத்திருக்காதது துரதிஷ்டவசமே .
வேலூரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏலகிரி. வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு சீரான சீதோஷ்ணநிலை நிலவுவதால் இது ஒரு கோடை வாச ஸ்தலம் என்பதயும் தாண்டி அனைத்து நாட்களிலும் செல்லக்கூடிய ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும்.
கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகளும், உடலுக்கு இதமான யூகலிப்டஸ் மரங்களும் நிறைந்த ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏலகிரியின் வெப்பநிலை 11 டிகிரி முதல் 34 டிகிரி தான்.
ஊட்டி, கொடைக்கானலில் உள்ளது போல் ஏலகிரியிலும் சுற்றிப்பார்ப்பதர்க்கு பல இடங்கள் இருக்கின்றன. அவை
  • பூங்கானூர் ஏரி
  • வேலவன் கோவில்
  • ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
  • தொலைநோக்கி மையம்
  • அரசு மூலிகை பண்ணை
  • அரசு பழப்பண்ணை
  • குழந்தைகள் பூங்கா

பூங்கானூர் ஏரி

56,706 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டவையாகும். இந்த ஏரியில் படகு சவாரி செய்வது ஒரு அலாதியான அனுபவமாகும். ஏரியின நடுவில் ஒரு செயற்கை நீருற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

ஏலகிரி வழியாக பாயும் ‘அத்தாறு’ ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 30 மீ. இந்த அருவிக்கு நேர்வழி இருந்தாலும் பலநேரங்களில் அந்த வழி மூடியே இருப்பதால், நிலவூர் கிராமத்தில் இருந்து மலையில் 5 கி.மீ நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த அருவிக்கு அருகே சிவலிங்கம் வடிவில் ஒரு கோவிலும் உள்ளது.

வேலவன் கோவில்

ஏலகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது இந்த முருகன் கோயில். இங்கிருந்து ஏலகிரியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஆடி மாதத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

தொலைநோக்கி மையம்

ஏலகிரி செல்லும் மலைப்பாதையில் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. பதிமூன்றாவது வளைவில் திருப்பத்தூர் வனச்சரகத்தால் ஒரு தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இயங்குவது ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்கி. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்களை சுற்றுலாப் பயணிகள் காண இதில் வசதி இருக்கிறது. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக கோடைவிழா மற்றும் வசந்தவிழா நடக்கும். அச்சமயங்களில் இந்த தொலைநோக்கியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு மூலிகை , பழப்பண்ணை

பூங்கானூர் ஏரியின் அருகே இந்த அரசு மூலிகை பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சித்த மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கிடைக்கும். மேலும் ஏலகிரியில் உள்ள அரசு பழ பண்ணையில் மலை பழங்கள் கிடைக்கும்.

குழந்தைகள் பூங்கா

ஏரிக்கு அருகில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த பூங்கா.குழந்தைகள் விளையாடி மகிழ அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா ஸ்தலம் என்பதையும் தாண்டி ஏலகிரிக்கு மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. தென்னிந்தியாவிலேயே பாரா கிளைடிங் விளையாட்டு இங்கேதான் நடத்தப்படுகிறது. ஏலகிரி சாகச விளையாட்டு கழகம் (YASA-YELAGIRI ADVENTURE SPORTS ASSOCIATION) இதனை நடத்துகின்றது. ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் ‘பாரா-கிளைடிங்’ திருவிழா இங்கே நடக்கும். இது மட்டுமன்றி மலையேற்றம், பாறையேற்றம், இருசக்கர சாகச விளையாட்டு என்று பல விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
ஏலகிரியானது ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் ஏலகிரி சுற்றுலா தளம் உள்ளது.
குடும்பத்துடன் குறைந்த செலவில் ஒரு ரம்மியமான இடத்திற்கு சென்று வந்த திருப்தி நிச்சயம் கிடைக்கும் இந்த ஏலகிரியில்.

நாளை :கொல்லிமலை

No comments: